Wednesday, October 24, 2012

வானவில்லா? வண்ணவில்லா?


என் வாழ்க்கையில் முதன் முதல் நான் ஒரு முழுமையான வானவில்லை பார்த்த பொது எனக்கு 25 வயதிருக்கும் என்று நினைக்கிறேன், திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது அவினாசி வந்து கோவை செல்லும் பேருந்தை பிடிப்பது வாடிக்கையாக இருந்த சமயம், அப்படியான சமயங்களில் ஒரு மழைக்கால மாலை வேளையில் அவினாசி புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது, அவினாசி - கோவை சாலையின் நீட்சி காரணமாகவும், பெரிய கட்டிடங்களின் மறைப்பு இல்லாததாலும் தூரத்தே மேற்கு தொடர்ச்சி மலைகளைத் தாண்டிய தொடுவானத்தில் அந்த ரம்மியமான மாலைப்பொழுதின் வெயில் மழைக்களப்பில் உருவாகி நின்ற ஒரு முழுமையான வானவில், என்னை சில நிமிடங்கள் உறைய வைத்து பெய்யும் தூரலிலேயே நிற்க வைத்தது.. அது தான் நான் பார்த்த அல்லது என் நினைவில் நிற்கிற முதல் வானவில் காட்சி..

எனக்கென்னவோ வானவில் என்பது ரெயின்போ எனும் ஆங்கிலச்சொல்லின் தமிழாக்கம் போலவே, ஒரு அன்னியத்தன்மையோடே தோன்றுகிறது. வானவில்லின் வண்ணம், அதன் தோற்றம், அழகு, தோன்றுகிற இடம், அந்த சூழலின் ரம்மியம் இதையெல்லாம் பிரதிபலிக்கின்ற ஒரு பெயர் தான் வானவில்லுக்கு இருக்க முடியும். என்னுடைய இலக்கிய அறிவின் (!?#%) எல்லைக்குள் தேடி ப்பார்த்து விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறேன், யாரேனும் சொல்லுங்களேன் வானவில்லின் உண்மையான அந்த அழகுப்பெயர் என்னவென்று

Tuesday, October 23, 2012

குயிலே கவிக்குயிலே..



80 களின் இசையும் வாழ்வும் என்றொரு தலைப்பில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியைப்பார்த்து முடித்தபின், எப்போதும் எழுகின்ற எண்ண அலைகள் அப்போதும் எழுந்தன. வாழ்வின் புண்பட்ட,பண்பட்ட, நெகிழ்வான, மகிழ்வான, அழகான, அகோரமான எல்லா தருணங்களுக்கும் ஏற்ற பாடல்கள் 80 களில் குவிந்து கிடக்கின்றன. இந்தப்பாடலை நாம் கேட்டதில்லையே என்ற படலை ஒருவர் உணர்ச்சி மிகுதலோடு தனது வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பாடுவார் , கேட்கின்ற பாடல் காதல் பாடலோ, அல்லது வேறு பாடலோ நமக்குள் கொட்டிக்கிடக்கின்ற உணர்வுகளை தட்டி எழுப்புகின்ற மெல்லிய மணிக்கைகளை அந்தப்பாடல்கள் கொண்டிருக்கின்றன...
நிகழ்ச்சி முடிந்து உறங்கச்செல்லுமுன் குயிலே கவிக்குயிலே எனும் ஜானகியம்மாவின் குரலில் வந்த பாடலை கேட்க விரும்பினேன், நம் எண்ணங்களை இளகி ஓட வைக்கும் இயல்பு நிறைந்த பாடல்களில் இந்த பாடலுக்கு ஓரிடம் எப்போதும் உண்டு.. நான் வாய் விட்டு அழுத மிகச்சில நேரங்களில் அதுவும் ஒன்று..எந்த நினைவுகள் கண்ணீரையும் கேவலையும் தூண்டின என்று தெரியவில்லை, என் தோள் தூக்கி வளர்த்த எத்தனையோ குழந்தைகள், என் அன்புக்கும், அபிமானத்துக்கும் பிரியமான குழந்தைகளின் முகங்கள் நினைவில் வந்து போயின, எனக்கான ஒரு குழந்தை இல்லை என சொல்லிச்செல்ல...

நீண்ட நாட்களுக்குபிறகு வரும் பாலு மகேந்திராவின் பேட்டி அது என்று நினைக்கிறேன், விகடனில் வந்திருந்தது, வழக்கம் போல சினிமாவைப்பற்றி பேசி விட்டு முடிவில் முத்தாய்ப்பாக ஒரு வார்த்தை சொல்கிறார், ' பெண்களையும் காதலையும் பற்றிப்பேசினால் எனக்கு ஆயிரம் பக்கங்கள் கூட போதாது" அவருக்கு மட்டும் தானா? நம் சமூக சூழ்நிலையில் எல்லா ஆண்களுக்கும் மனதில் பெண்களைப்பற்றியும், அவர்கள் மீதான காதலைப்பற்றியும் பேசுவதற்கும் ஆயிரமாயிரம் பக்கங்களுக்கான நினைவுகள் இருக்கின்றன, எனக்கும் முந்தைய நாள் இரவில் குயிலே கவிக்குயிலே என்ற குரலில் இழைந்து உடைந்து நான் கண்ணீர் விட்டு அழுத போது குட்டியின் மனதில் எண்ண ஓடியது என்று தெரியவில்லை, பிறகு மேதுவாகக்கேட்டாள், "என்னப்பா எனன சீக்ரெட் என்று", எனன ரகசியம் எனக்கு மட்டும், உலகமெல்லாம் இருக்கும் ரகசியம் தான்.. பள்ளிக்கூட வயதில் இருந்து பெண்கள் மனதைப்பாதித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பலரது முகமும் பெயரும் கூட நினைவில் நிற்பது இல்லை..பலருக்கு நான் யார் என்பது கூட தெரியாது...அடிக்கின்ற காற்று ஆலமரத்தை கூட சாய்த்து விட்டு போகும், ஆலமரத்துக்குத்தான் அந்த காற்றும் நாளும் நினைவில் இருக்கும், அந்த காற்றுக்கு..

பெண்கள் அந்த காற்றுப்போல் இருக்கிறார்கள்.. மெல்லிய தென்றலாய் பல இதயங்களைக்கடந்து செல்பவர்கள் உண்டு, சூறாவளியாய் சுழன்றடித்து சாய்த்து விட்டு செல்லும் பெண்களும் உண்டு.. மூச்சுக்காற்றாய் நம்முள்ளே இழையோடிக்கொண்டிருக்கும் பெண்களும் உண்டு.. அவர்கள் தாயாகவோ, மனைவியாகவோ, என்றுமே நம் வாழ்வில் வர முடியாத சில பெண்களைப்போல தன்னிச்சியின்றி அனிச்சையாக பல மனங்களை பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்..

ஆண் பெண் உறவை மிகுந்த கட்டுக்கோப்பான உறவாக வைக்க முயற்சித்த நமது சமூகத்தில் பெண்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள் அல்லது அப்படிப்பார்க்கப்பட்டார்கள், மிக அழகான விசயமாகவும் அதே நேரம் மிகக்கொடுமையானதாகவும் இருக்க முடிகிற ஒரு விஷயம், பெண்கள் மனதில் காதல்,,, நம் சமூகத்தில் பெண்கள் காதல் வயப்பட்டதை கண்களாலும், சாடையாலும், உடல் மொழியாலும் சொல்லிச்செல்லும் பொது அழகாக தெரிகிற ஒரு விஷயம், அதே பெண்கள் குடும்ப, சமூகக் காரணங்களுக்காக அந்தக்காதலை புதைத்து விட்டுச்செல்லும் போது, அவள் காதலை உணர்ந்த ஒரு ஆணின் வாழ்வில் ஒரு கணமேனும் கொடூரமான விசயமாக மாறி விடுகிறது. இதையெல்லாம் தாண்டி என் உரிமைகளைச்செலுத்த இயலுகின்ற, எனக்கே எனக்கனவளாய் நான் நினைக்க முடிகின்ற ஒரு பெண் என் மனைவியா, இல்லை ... இன்னும் பிறக்காத என் மகளா ?

Friday, October 12, 2012

வாழ்வின் பொழுதுகள் !!!


என் வாழ்வின் சிறப்பான பகுதியை

உன்னை கவர்வதில் செலவழித்து விட்டேன்

உன்னுடனான பிந்தைய பொழுதுகளில், நான்

மென்மையானவனாக இல்லாவிடில், பழி எனக்கல்ல..

நம்முடைய நேரங்களில் எது சிறந்த நேரம்.

நீ பேசி நான் கேட்டுக்கொண்டிருப்பதா

நான் பேசி நீ கேட்டுகொண்டிருப்பதா

இல்லை பேசாமல் கழித்த பொழுதுகளா, அல்லது

இருவரும் பேசிக்கழித்த பொழுதுகளா

நம் பொழுதுகளை நிறைத்த நேரம் யாருடையது

நேரங்களின் உரிமையாளர் யாரென தெரிவதில்லை

வாழ்க்கை நம் பொழுதுகளை நிரப்பியிருக்கிறது

அதை கொண்டாட மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறோம் ...

சூச்சூ மாரி...

சூச்சூ மாரி...



முட்டாளு முட்டாளு நானு தான்

மூளையில்லாத ஆளுதான், சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

தெனமும் தெனமும் திட்டுறா, ஆனாலும்

இவள சுத்துறேன், சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

லேட்டு லேட்டா எந்திரிச்சு

ஓட்சு கஞ்சிய ஊத்துறா, சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

கடை கடையா ஏறித்தான்

விண்டோ ஷாப்பிங் பண்ணுறா.. சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

நாடு நாடா சுத்திதான்

நாலு ருபாய்க்கு வாங்குறா சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

ரெண்டு சட்டினி கேட்டாக்க

சிண்டு முடியை ஆட்டுறா சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

குண்டு குண்டு ரதியக்கா

ரெண்டு மடங்கு ஆயிட்டா சூச்சூ மாரி ..சூச்சூ மாரி..

பெண்கள் தின வாழ்த்துக்கள் !!!!!

அன்னையவள் அன்பைத்தந்தாள்
ஆசிரியை போல் அறிவைத்தந்தாள்
இன்ப துன்பம் எல்லாம் அறிய
ஈன்றவளே கற்றுத்தந்தாள்
உண்ண உணவும் உடுப்பும் தந்து
ஊண் பசி ஆற்றித்தந்தாள்
எண்ணம் எல்லாம் சீராக்கி
ஏற்றம் பெற வழியைத்தந்தாள்
ஐயம் ஏதும் இன்றி அவள் தான் தெய்வம்
ஒழுக்கம் விழுப்பம் எல்லாம்
ஓய்வின்றி ஒதித்தந்தாள்
ஔவை போல் ஆதித்தமிழை
அப்பழுக்கின்றி கற்றுத்தந்தாள்
என் உயிரெழுத்தாக தாய் இருக்கிறாள்
மெய்யெழுத்தாக நீ என் உயிர் நிரப்பினாய் குட்டி!!!!
உன் அன்புக்கு ஈடு செய்ய எதுவுமில்லை இந்த தமிழைத்தவிர.....

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

பல்லாண்டு வளர்த்தெடுத்த
பண்பாடு மறந்தோம்!!
ஈராயிரமாண்டாய் ஈன்றெடுத்த
கலைச்செல்வம் மறந்தோம் !!
ஆதி முதல் இடையிடையே
ஒற்றுமை இழந்தோம் !!
ஆழியூடே ஓடி வந்த
ஆங்கிலேயருக்கு அடிபணிந்தோம்!!
அரையும் குறையுமாய் அவர் தம்
கலாச்சாரம் கற்றோம் !!
அதுவே காலத்திற்கும் சோறிடுமென
கற்பனை வளர்த்தோம் !!
சீனா, ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு போல
தாய்மொழியில் கல்வியும் தொழிலும்
செய்யும் நாளே தமிழ்த்திருநாள் !!
அது வரை நம் உள்ளத்தீ வளர்த்திருப்போம் ..
நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தருவோம் !!
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

Friday, March 9, 2012

பெண்கள் தின வாழ்த்து ( என் மற்ற மொழி தோழிகளுக்கும் )

தாயாய் சேயாய்
தாரமாய் தலைவியாய்
தங்கையாய் தோழியாய்
பெண்ணாய் பொன்னாய்
பேதையாய் மேதையாய்
இன்பமாய் துன்பமாய்
அன்பாய் அறிவாய்
எல்லாம் பெண்ணாக நிறைந்திருக்கிறது இவ்வுலகம்
எல்லா நாளும் பெண்கள் தினமே ... வாழ்த்துக்கள்
as a mother, as a daughter
as a partner, as a leader
as a sister, as a friend
as a bold woman, as a gold woman,
as a silly, as a brilliant
as a love, as a hurt
this world is filled with femine..
celebrate Femine...

பெண்கள் தின வாழ்த்து..

அன்னையவள் அன்பைத்தந்தாள்
ஆசிரியை போல் அறிவைத்தந்தாள்
இன்ப துன்பம் எல்லாம் அறிய
ஈன்றவளே கற்றுத்தந்தாள்
உண்ண உணவும் உடுப்பும் தந்து
ஊன் பசி ஆற்றித்தந்தாள்
எண்ணம் எல்லாம் சீராக்கி
ஏற்றம் பெற வழியைத்தந்தாள்
ஒழுக்கம் விழுப்பம் எல்லாம்
ஓய்வின்றி ஓதித்தந்தாள்
ஔவ்வை போல் ஆதித்தமிழை
அப்பழுக்கின்றி கற்றுத்தந்தாள்
என் உயிரெழுத்தாக தாய் இருக்கிறாள்
மெய்யெழுத்தாக நீ என் உயிர் நிரப்பினாய்.
உங்கள் அன்பிற்கு ஈடு செய்ய எதுவுமில்லை இந்த தமிழ் தவிர..