Tuesday, September 27, 2016

உள்ளாட்சி தேர்தல்

கொள்கைகளையும், வளர்ச்சியயும் பற்றி பேச சொன்னால் தனிமனித தாக்குதலில் தான் முடிகிறது,

அவர்கள் செய்த ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்களையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பையும் பார்த்தால் தலை சுற்றுகிறது,


ஒருபக்கம் பார்த்தால், உழைப்பு சுரண்டல், போலி திவால் அறிவிப்பின் மூலம் வங்கிகளை ஏமாற்றி ஊழல்,


மறுப்பக்கம் பார்த்தல் பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிப்பதற்க்காக சட்டத்தை வளைத்த குற்றசாட்டு, ஆதாரங்களை அழித்த குற்றசாட்டு,


சாதிப்பாகுபாடுக்கு சற்றும் குறைவில்லாத இனப்பாகுபாடு, அதன் விளைவான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,


காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை, காவல்துறையின் பயிற்சி குறைபாடு, மக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் பற்றிய பிரச்சினை, ஆயுத கலாசாரம்,


வேலை இழப்பு, வேலை இல்லா திண்டாட்டம், நிறுவனங்கள் வெளியேறுதல், வெளிநாட்டுப்பொருட்களின் ஆதிக்கம்,


பல வருடம் ஆட்சியில் இருந்த பின்னும் வளர்ச்சி பற்றி திட்டம் தீட்டுவோம், வறுமையை ஒழிப்போம், வேலை வாய்ப்பு பெருக்கப்படும் போன்ற பேச்சுக்கள்,


இணைய குற்றங்கள், தேச பாதுகாப்பில் மக்களுக்கு நம்பிக்கையில்லாத நிலை,


உள்நாட்டுக்கடன் அதிகரிப்பு, வெளிநாடுகளில் செலவு செய்யும் நிலை,


பொய்க்குற்றசாட்டுகள், தனி மனித தாக்குதல், பேச்சு மாற்றிப்பேசுதல்


இப்படி பல விஷயங்கள் நம்மூரு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் அளவுக்கு இருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார விவாதம் கார சாரமாக, பார்க்கும் விதத்திலும், பெரும்பாலும் கோட்பாடு அடிப்படையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தாலும் ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியுடனும் இருப்பது போல பல கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை கொண்டுள்ளது,


இருந்தாலும், இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை நமது தேர்தலில் ஒப்பிட்டு பேசி நமது தேர்தல் முறையை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றது..


அமெரிக்கா போல அல்லாமல், நமது நாட்டில் தனி  மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர பிரதமரின் பங்கு மிக மிக குறைவு.. உண்மையாகவே சொல்லப்போனால் நதி நீர் பிரச்சினை போன்ற பெரிய பிரச்சினையிலும் கூட பிரதமரின் சட்டப்பூர்வ அதிகாரமோ அல்லது ஆர்வமோ பெரிதாக இல்லை.. நேரு காலத்திலும் இது தான் நடந்தது, அவரை பெரிதாக விமர்சித்து பதவிக்கு வந்த மோடி காலத்திலும் அதே தான்..


ஒரு சிறந்த பிரதமரின் காலத்திலும் மோசமான முதல்வர்களை கொண்டிருந்த, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த மாநிலங்கள் மோசமான வளர்ச்சியைதான் சந்தித்து வந்திருக்கிறது..


ஏன் கிட்டத்தட்ட 5 பிரதமருக்கு மேல் நாட்டுக்கு தந்த உ பி யில் வளர்ச்சி தமிழ்நாட்டை விட எப்போதுமே குறைவு தான்.. நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை தரும் மகாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ இருந்து எந்த பிரதமரும் வரவில்லை, இந்த மாநிலங்களின் நிலைக்கு எந்த பிரதமரும் நேரடியாக காரணமில்லை,


உண்மையில் நமது வளர்ச்சி, முதல்வர், எம் எல் ஏ, கவுன்சிலர், சில விஷயங்களில் எம் பிக்கள், பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், நல்ல இடைநிலை கீழ்நிலை அதிகாரிகள் என எல்லாரிடமும் இருக்கிறது,


இவ்வளவு நேரம் முக்கி முக்கி அமெரிக்க வரை எக்ஸாம்பிள் சொல்லி இந்த பதிவை எழுத காரணம், உள்ளாட்சி தேர்தல் வருகிறது.. கட்சிக்கு இங்கே வேலை இல்லை, அந்த பகுதி மக்களின் நம்பிக்கை பெற்ற நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் .. மோடி பிரச்சாரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இங்கே தனி ம்னிதர்களுக்கு , நல்ல மனிதர்களுக்கு கொடுங்கள் ...வளமான பஞ்சாயத்து ராஜ் வளமான இந்தியாவுக்கு அடிப்படை ...மனதில் வைத்து வாக்களியுங்கள் ...



வலி மிகுந்த பதிவு ஒன்றை பொன்ராஜ் பதிவிட்டிருந்தார்., அரிக்காமேடு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு அல்ல.. ஈரோடு அருகே உள்ள கொடுமணல் ஊர் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டாலும்.. iron age வகையை சேர்ந்த இது தொல்லியல் துறையால் காப்பாற்றப்படவேண்டும் ..நிதி பற்றாக்குறையால் அகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,, பாண்டிச்சேரி பல்கலையின்  ராஜன் அவர்கள் ஆய்வின் கீழ் உள்ளது.


மாமல்லபுரம் அருகே கடலின் அடியில் கிட்டத்தட்ட 12-15 அடி  உயரத்தில் 40 மீ உயரத்தில் கட்டிட கல் அமைப்புகள் உள்ளன..இது அகழ்வு செய்யப்படவில்லை அதற்கான முயற்சிகளும் ஊக்குவிக்கப்படவில்லை ..Graham Hancook இன் டாகுமென்டரியை யூ டியூபில் காண்க. இது சரியான முறையில் ஆய்வு செய்யப்பட்டால் மொத்த தமிழ்நாட்டுடன் புவி ரீதியாக இணைந்திருந்த தெற்காசிய நாகரீகத்தை கண்டு பிடிக்க முடியும்..


மரக்காணம் அருகே ஓணம்பாக்கத்தில் மெகாலிதிக் அல்லது iron age cairns circle பகுதி கல் குவாரிகளின் பிடியில் சிக்கி அழிய உள்ளது.. பாண்டிச்சேரி பல்கலையின்  ராஜன் அவர்கள் ஆய்வின் கீழ் உள்ளது. TS சுப்ரமணியன் அவர்கள் பதிவையூ டியூபில் காண்க .. மறுபடியும் நிதி இல்லாமை இங்கு ஒரு குறை..
 
ஆதிச்சநல்லூரில் 150 ஏக்கரில் 75 சென்ட் மட்டுமே அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நமது ASI ஹரப்பா பகுதியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறது ..இதில் பிரதேச அரசியல் மிகப்பெரிய அளவில் இயங்குகிறது..நிதி, ஆர்வம் பாதுகாப்பு மூன்றும் மிக முக்கியம் இப்போது ..

Monday, September 12, 2016

வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,

வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,
வழி தவறி வாய் தவறி கை  தவறி தவறிழைக்கும்
மனிதரின் தவறால்  குருதியை சேர்த்து வந்துவிடாதே  ..


ஆட்சிக்கும் அதில் வரும் மாய மாட்சிக்குமன்றி
அவர் துடிப்பது உனக்காக என்று நம்பி தங்கி விடாதே
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


உன் வழியெங்கும் மணல் சுரண்டி அகல நடக்க வழியின்றி
ஆழப்புதைத்த எம்மீது கோபம் கொண்டு இருந்து விடாதே
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


மழை தவறும் வருடம் உன்னை நினைத்து மற்ற தினம்
உன்னை மறந்து குழி பறிக்கும் மடையர் தாம் நாங்கள்
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


கோலோச்சும் மன்னருக்கும் அவருக்கு குடை பிடிப்பார்க்கும்
குடிக்கவோ குளிரவோ அன்னமோ ஆகாரமோ இல்லை பிரச்சினை
விதைப்பவனே விதையாகிப்போகும் நிலை மாற்றவேனும்
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே .,


தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழித்தாரில்லை
நதிக்கெல்லாம் தாயின் பெயர் , நதி தான் எங்கள் நாகரீகத்தொட்டில்
ஏட்டில் மட்டுமே படித்து வளர்ந்தோம், ஏமாந்த இந்த தலைமுறை
சோற்றுக்கு நாளை மணலை மட்டுமே தின்னும் இந்த கூட்டம்
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே ..


புத்தியிலும் இல்லை எங்கள் சக்தியிலும் இல்லை
உயிரோடு ஓடும் ஒரு நதியை உயிர் கொடுத்து காக்க ...
திராணியற்ற இந்த தமிழரின் வயிறு காய்கிறது
வழி தவறியேனும் வரப்பு வந்துவிடு எம் நதியே ..



Monday, September 5, 2016


வெளியெங்கும் ஆசிரியம் ...





கற்றலும் கற்பித்தலும் கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது..சில கணங்களில் ஆசிரியர் உணராமல் பல கணங்களில் கற்றுக்கொள்ளும் மாணவர் உணராமலும் , கற்றலும் கற்பித்தலும் கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. ஆசிரியர் உணராமல் இருப்பது பிழையோ பிரச்சினையோ அல்ல..கற்றுக்கொள்கிறோமா இல்லையா என்று கற்றுக்கொள்ளும் மாணவர் உணராமல் போவது தான் இங்கு அதிகம் நடக்கிறது ...






இந்த ஆசிரியர் தினத்துக்கு எனக்கு முறையாக பள்ளி கல்லூரியில் பயிற்றுவித்த ஆசிரியர்களைப்பற்றி பேசப்போவதில்லை..ஏற்கனவே என்னைபோன்றவனை மாணவனாக பெற்றதின் பயனாக களைப்படைந்து அவர்கள் ஓய்ந்திருப்பார்கள்..அவர்களை சற்றே இளைப்பாற விட்டு..வேறு எங்கெல்லாம் நன்றி பாக்கி இருக்கிறதென்று பார்ப்போம்..






மனிதர்கள் மிக முக்கியம்..காணும் மனிதர் யாவிலும் நட்பு நிறைந்த ஒரு பக்கத்தை கண்டெடுத்து,  நட்பு கற்பு போல என்று நட்பிலிருந்து பிறழும் போதெல்லாம் உணர்த்தி, நட்பு  உடுக்கை இழந்தவன் கை போல எனக்கற்றுக்கொடுத்த நண்பன்...\






இன்லேண்ட் லெட்டர் இருந்த 2000க்கு முந்திய எனது பள்ளிப்பருவத்தில்..ஆங்கிலத்தில் எழுத தெரியாட்டி என்ன..தமிழையே ஆங்கிலத்தில் எழுதிப்பழகு என்று ஆங்கிலத்தை அஞ்சல் வழியில் கற்றுக்கொடுத்த ஒரு சகோதரி ..






எதைசெய்ய நினைக்கிறாயோ அதை சரியாக செய்.. செய்யத்தெரியாவிட்டால் விட்டு விலகு.. முயற்சி பலன் தராத விஷயமும் ஒன்று உண்டா என கற்றுக்கொடுத்த முயற்சியால் உயர்ந்த ஒரு நண்பன்..






மோகினியாட்டம் ஆடி முடித்து களைத்த கலைஞனைப்போல பதின் பருவ முடிவில், பட்டப்படிப்பு முடியும் தருணத்தில் சோர்ந்திருந்த போது, வாழ்க்கை என்பது ஒரு பயணம், களைத்து அமர்பவன் பயணிக்க முடியாது என்று ஊக்கம் எனும் அருமருந்தை ஊட்டி இன்று வரை ஓடக்கற்றுக்கொடுத்த தோழி ..






ஏதேனும் ஒன்றைப்படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று என் அறியாத வயதிலேயே படிப்பித்த என் தந்தை




இன்னும் எனக்கு ஆறோ எட்டோ தான் வயது என்று என்னும் அளவிற்க்கு பாசத்தைக்காட்டி, அதே சமயம் அந்த வயதிற்கான அறிவு தான்  எனக்கு இருக்கும் போல என்று என்னும் அளவிற்கு இன்னும் எனக்கு புத்தி சொல்லி கற்பிக்க முயன்று கொண்டே இருக்கும் என் தாய் ...






பொறுமையின் சிகரம், சுறுசுறுப்பில் சூரியன், கோபத்தில் குளிர்நிலவு எனப்பேரெடுத்த என் போன்ற ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்க்கையில் திருமணம்  என்பது தியாகத்தின் உச்சக்கட்டம் என வாழும் பாடமாய் இருந்து, அடிப்படை வாழ்க்கை முறைகள் பலவற்றை மட்டுமில்லாமல் இவளுக்கு இதெல்லாம் தெரியுமா என என்னை தினந்தோறும் வியப்பூட்டி வம்படியாக கற்றுக்கொள்ள வைக்கும் என் இரண்டாம் தாய்... என் மனைவி...






இன்னும் எண்ணிலடங்கா என் நண்பர்கள், முகம் தெரியாமல் ஆசிரியராய் இருந்து எனக்கு கற்றுக்கொடுத்த, நான் கற்றுக்கொண்ட பல தோழர் தோழிகள், முக்கியமாக கற்றுக்கொள்ளலின் ஆகசிறந்த பயனான பொருளீட்டலில், அடிப்படை நிர்வாக அறிவிலிருந்து நிர்வாக மேலாண்மை வரை நான் கற்றுக்கொள்ள உதவியாய் இருந்து, எனக்கு கற்றுக்கொடுத்த என் சக ஊழியர்கள் மற்றும் என் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நன்றிகள் ...நீங்கள் உங்களை அறியாமலேயே என் வாழ்வில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.. நன்றி!!!!








காடும் மலையும் எந்தன் குருவே -அந்த
அணிலும் ஆடும் எந்தன் ஆசான்
ஓடும் நதியும் ஒளியும் நிலவும்
ஓய்வின்றி சொல்லுதிங்கோர் பாடம்





மேயும் முகிலும் மிரட்டும் மழையும்
கீழோடும் புல்லும் கிழக்கு கதிரும்
காயும் வெயிலும் கடலும் படகும்
கடந்தே போகும் ஒன்றை கத்திச்சொல்லி,






காலின்  கீழே அலையும் நிழலும்
காதின் அருகே சொல்லுமொரு சேதி
மாலை மங்கும் வரை தான் காலின் நிழலும்
காலம் போகுமுன்னே கடமை முடி மகனே !!!