Monday, October 31, 2016

அரசியல் பேச்சு





சமீப காலங்களில் பார்த்த அரசியல் பேச்சுக்களில், முக்கியமாக அரசியல் அனலாய்ப்பறக்கும் தேர்தல் பிரச்சாரப்பேச்சுக்களில் இவருடைய பேச்சு சிறந்த பேச்சுக்களில் ஒன்று  என்று இவருடைய பேச்சை கவனித்து வருபவர்கள் சொல்லிவிட முடியும்..


உங்கள் மனங்கள் மோடியில் ஆரம்பித்து ஜெயலலிதா, ஸ்டாலின் வழியாக விஜயகாந்த் வீட்டுக்கெல்லாம் போய் சீமானிடம் சென்று குழம்பி நிற்பது தெரிகிறது.. உங்கள் மனதை ஒரு விமானத்தில் ஏற்றி அமெரிக்கா வரை சென்று நிறுத்திவிட்டு சற்றே சுற்றிப்பாருங்கள் ...


இவர் ஒரு முழு நேர அரசியல்வாதியல்ல, இருந்தாலும் அவருக்கு தார்மீக அரசியல் பொறுப்பு இருக்கிறது என்பதற்காக அவர் பேசிய பேச்சின் சாரம் தான் மிக நல்ல உதாரணத்தை நமக்கும் நம்முடைய அரசியல் தலைவர்களுக்கும் விட்டுச்சென்றிருக்கிறது., நம்மூர் அரசியலின் மையப்புள்ளி சுற்றும் இடம் எப்போதுமே வேறு தான்..இருந்தாலும் இந்த மாதிரி பேச்சை எல்லாம் சிலபஸில் வைத்தால் ஒரு நாள் பாஸாகிவிடமாட்டோமா என நப்பாசை தான்.


மிச்செல் ஒபாமா தான் அந்த பேச்சாளர் .. கீழே அவருடைய பேச்சின் யூடுயூப் இணைப்பைக்கொடுத்துள்ளேன்.. நேரமிருப்பவர்கள் முழுப்பேச்சையும், நேரமில்லாதவர்கள் 5 ஆவது நிமிடத்தில் இருந்து சில நிமிடங்களுக்கு மட்டுமாவது கேளுங்கள்.


பேசுவதில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த வீடியோவை பரிந்துரையுங்கள்.


ஹிலாரிக்கு ஆதரவாக பிரச்சாரம், டொனால்ட் டிரம்ப் அருவருக்கத்தக்க வகையில் பேசிய ஒலி நாடாவின் மீதான விமர்சனம் இது தான்  பேச்சின் சாரம், அவர் எப்படி மேடைக்கு வருகிறார், அந்த விரைவு வினாடிகளில் எவ்வாறு கூட்டத்துடன் தான் ஒன்றிப்போகிறார், சிரித்த முகத்துடன் கையசைத்து ஹாய் சொல்லி எவ்வளவு விரைவாக உணர்ச்சிகரமான, ஒரு ஒருங்கிணைக்கக்கூடிய விஷயத்தை அவர் கையாள்கிறார் என்பது எல்லாம் முதல் இரண்டு நிமிடங்களிலேயே நிகழ்ந்து விடுகிறது.. நம்மூர் போல மேடையில் வீற்றிருக்கும் என ஆரம்பித்து அரைமணிநேரத்தை செலவு செய்யும் பழக்கம் இல்லை.. ஒற்றை மைக்குடன் ஒரு போடியம் அப்புறம் சுற்றிலும் நன்கு நெருங்கிய தொலைவிலேயே மக்கள்.. மொத்தமே அரைமணிநேரம் தான் சமயம்..அதற்கு அப்புறம் கூட்டம் நிற்காது.. அதற்குள் நினைத்து வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும் ...


டிரம்ப்பின் மீதான விமர்சனத்தை மிகவும் நாகரீகமாக, நடுத்தர வர்க்க அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்வின் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளை மையமாக வைத்து கையாள்கிறார்..நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மிக சாதுரியமாக என் வீட்டில் உள்ள ஆண்கள் இவ்வாறு பேசமாட்டார்கள் என்று சொல்வதன் மூலம், நானும் உங்களைப்போல ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் தான் என்று கூட்டத்தின் நடுவே தன்னை இருத்தி சட்டென்று கூட்டத்தை தனக்குப்பின்னால் வரச்செய்து, தான் அவர்களுக்கு எதிராக நின்று பேசவில்லை, ஆனால் அவர்கள் முன் நின்று அவர்கள் சார்பாக பேசுகிறேன் என்ற உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெறுகிறார். 


டிரம்ப் பேசிய பேச்சின் சாரத்தை என்ன தான் ஹிலாரி பெண்ணாக இருந்தாலும், அவர் எதிர்த்து பேசும் போது அதில் அரசியல் தான் தெரியும், ஆனால் மிச்செல் ஒரு பெண்ணாக இருப்பதும், அவர் ஆப்ரிக்க பின்னணி கொண்டவராக இருப்பது இயல்பான நடுத்தர வர்க்க தோற்றத்தை தருவதும் இந்தப்பேச்சின் வெற்றிக்கு முக்கிய காரணம், இருந்தாலும், இந்தபேச்சில் அவருடைய ஆளுமையும், பேச்சுத்திறமையும் பெரிதாக வெளிப்பட்டு ஒரு முக்கிய திருப்பத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேணும்.


கோச் எல்லாம் வைத்து பயிற்சி எடுத்துக்கொண்டாலும் பேச்சுக்கலை ஒரு வரம் என்பது உண்மைதான் இல்லையா.. அப்படிப்பார்த்தால் நம் நாட்டின் இரண்டு முக்கியமான வாரிசுகளான ராகுலும், ஸ்டாலினும் கூட கடந்த தேர்தல்களுக்காக கோச் எல்லாம் வைத்து காசைகாரியாக்கினார்கள் என்று சொல்கிறார்கள், ஒரு ஆள் பண்ணினது ஆள் இந்தியா காமெடி என்றால் இன்னொன்று கிட்டத்தட்ட உள்ளூர் காமெடியை தொடுகிற வரை போனது.. பாட்டு பாடினது, அம்மா கால் சென்டருக்கு போன் போட்டது எல்லாம் இந்த வகையறா தான்..


ராகுல், ஸ்டாலின் இருவருமே தயக்கங்கள் நிறைந்த ஆளுமைகள்..ஒரு நல்ல தருணத்தில் அவர்களை எளிதாக கார்னர் செய்து விடமுடியும் என்பது அவர்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும், அவர்களின் பெற்றோர் புண்ணியத்திலும், கட்சிப்பாதுகாப்பிலும் தில்லாக சுற்றி வருகிறார்கள் ..


மறுபடியும்,விமானத்தைஅமெரிக்காவுக்குத்திருப்புவோம்,  இப்படி டிரம்ப்பை  காலி செய்து விட்டு, அவர் அப்பாடா ஆளை விடுங்கள் என்று கிளம்ப வில்லை இனிதான் அஜெண்டா வே எனபது போல் ஆரம்பிக்கிறார்.. அதில் என்னைக்கவர்ந்த ஒரு வரி, ஹிலாரியை ஒரு மிகச்சிறந்த தாய் என்று விலாவரியாக சொல்கிறார்.. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சப்பைக்கட்டு போல தெரிந்தாலும், யோசித்துப்பாருங்கள், கடந்த எட்டு வருடமாக ஹிலாரி ஒரு செனட்டர், வெளியுறவுத்துறை அமைச்சர், அதற்க்கு முன்னால் ஒரு எட்டு வருடம் ஜனாதிபதியின் மனைவி, அதற்கும் முன்னால்  கவர்னரின் மனைவி என வாழ்வின் முக்கியமான தருணங்களில் முழு நேர வேலைப்பளுவுடனான வாழ்க்கை தான் அவருடையது .. அவர் மகள் செல்சியா பிறக்கும் போதே கிளிண்டன் ஆர்கன்சாஸ் கவர்னர்... ஆனால் அவர் தன் மகளை ஸ்டான்போர்ட், ஆக்ஸ்போர்ட போன்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்து டாக்டர் பட்டம் வரை பெறுவதற்கு  துணை நின்றிருக்கிறார்...நமக்கே தெரியும்..இந்த பல்கலைக்கழகங்களில் அரசியல் செல்வாக்கு எல்லாம் செல்லாது என்று.. அமெரிக்காவில் மட்டுமல்ல நம் நாட்டிலும் ஏன் உலகின் பெரும்பகுதிகளில் இது ஒரு சிறந்த விஷயம், பெரும் பதவியில் இருந்த எந்த அரசியல் வாதியின் பிள்ளைகள் நல்ல கல்வி பெற்று அதன் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் ... நம் தமிழ்நாட்டில் நமக்கு இருக்கும் ஒரே எடுத்துக்காட்டு பெரிய குடும்பம் தான்.. அந்த வீட்டுப்பிள்ளைகளின் படிப்பு மற்றும் தகுதி நமக்கு தெரிந்தது தான். மேலே இந்திரா குடும்பத்தில் எல்லாமே சந்தேக கேஸிலேயே இருக்கிறது..இந்த நிலையை அங்கு பொருத்திப்பாருங்கள்.


இப்படி ஹிலாரியின் எந்த தாக்கத்தை தூக்கிப்போட்டால் மக்கள் கப்பெனப்பிடித்துக்கொள்வார்கள் எனத்தெரிந்து சரியாக கல்லை வீசுகிறார் மிச்செல், எல்லா பெற்றோருக்கும் இரண்டு கனவு கண்டிப்பாக இருக்கும், தான் பெரிய ஆளாவது, தன் பிள்ளைகளை பெரிய ஆளாக்குவது ...இரண்டுமே ஹிலாரி விஷயத்தில் இருப்பதை மிச்செல் சரியாக பயன்படுத்துகிறார் ..


அடுத்து முக்கியமான அஸ்திரம், அமரிக்காவின் வாக்கு சதவீதம், என்ன தான் படிப்பறிவு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை என்று பேசினாலும், ஓட்டு போட எந்திருச்சு வாங்கப்பா என்று சொன்னால் அமெரிக்கர்கள் பேசிக்கலி சோம்பேறி தான், அவர்கள் வாக்கு பதிவு சதவீதம் 40-50 என்ற வீதத்தில் தான் இருக்கும், ஒபாமா ஜெயித்ததே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என குறைந்தவித்தியாசத்தில் தான்.. அதை மனதில் வைத்து வெளிப்படையாக உண்மை எல்லாம் பேசி, ஒபாமா 66 வாக்குகள் வித்தியாசத்தில் எல்லாம் வென்றார் என்று சொல்லி.. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று மக்களை கட்டி இழுக்கிறார் ... என்ன தான் டெலி ட்ரான்ஸ்மிட்டர் இருந்தாலும் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்த பேச்சு போல எங்குமே தெரியாமல் (இதில் மோடி நன்றாக ஸ்கோர் செய்வார்) பேசி கேட்பவர்களை வசியப்படுத்துகிறார்.


மற்ற படி, செய்வீர்களா செய்வீர்களா என பேசுவதை கேட்டு புளித்துப்போன காதுகளுக்கும், ரோபோட் போல ஆடாமல் அசையாமல்  "உட்கார்ந்து" ஒரு சுவாரசியமும் இல்லாமல் பேசுவதை (வைகோ, விஜயகாந்த்  எல்லாம் விதிவிலக்கு) பார்த்து சலித்த கண்களுக்கும், கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க/ கேட்க  நினைத்தால் மிச்செல்லின் பேச்சைப்பார்க்கலாம் / கேட்கலாம்.


https://www.youtube.com/watch?v=SJ45VLgbe_E
   

Tuesday, October 11, 2016

பின்னுருளும் நினைவுச்சக்கரம்



தமிழ் பண்டிகை மரபில் என்று சொல்ல முடியா விட்டாலும் தமிழ் விடுமுறை மரபில், தைத்திருநாளுக்குப்பின் அதிக நாட்கள் விடுமுறை பெற்றுத்தரும் பண்டிகை ஆயுதபூஜை / விஜயதசமி ஜோடி தான்..குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தான் என்றாலும் ஏதேனும் ஒரு வாரக்கடைசியுடன் இணைந்து நான்கு நாட்கள் வரை பெற்றுத்தரும் ஒரு அட்சய விடுமுறை தான் ஆ.பூ / வி த.  அப்புறம் என்ன அட்சய திருதியை மட்டும் தான் சொல்லனுமா.. அட்சய விடுமுறைன்னு சொன்னா  விடுமுறை பெருகுங்க ..சும்மா ஸ்கூல் பசங்க கிட்ட அடிச்சு விடுங்க, அடுத்த வருஷம் இது ட்ரெண்ட் ஆயிரும் ...


 என்னுடைய பெரும்பகுதி பள்ளிப்பருவம் முழுவதும் லாரி (இதுக்கு என்னாங்க தமிழ்ப்பேரு) அலுவலகங்கள் நிறைந்த கோவையின் மையப்பகுதியில் தான் வசித்து வந்தோம் ...


என்னதான் ஆயுதபூஜைக்கு வெள்ளை அடித்தல், சுத்தப்படுத்தல், ஜிகினா காகிதம் கட்டி பூஜை ஏற்ப்பாடுகள்  செய்வது என அப்பாவின் கடையில் வேலை பெண்டு நிமிர்ந்தாலும் தொடர்ந்து வரும் விடுமுறைகள் (அப்பாவின் கடைக்கும் சேர்த்து ) ஒரு உற்சாக ரத்தம் பாய்ச்சிக்கொண்டே இருக்கும் .


அங்குள்ள லாரி உரிமையாளர்கள் ஆயுதபூஜை தினத்தன்று இரவு பூஜைக்கு பிறகு அந்த பகுதி சிறுவர்காலை எல்லாம் லாரியின் பின்பகுதியில் ஏற்றிக்கொண்ட ஒன்றிரண்டு சுற்று சுற்றி இறக்கி விடுவார்கள், ஒரு வயது வரை அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்தது ..எல்லா முறையும் செல்வதற்கு வீட்டில் அனுமதி கிடைத்ததில்லை ( நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு )...அதனாலோ என்னமோ ஒரு லாரியின் பின்னால் ஏறிச்செல்வதற்கான  ஆசை இன்னமும் மனதில் இருக்கிறது ..


மறுநாள் எல்லா கடைகளும், போக்குவரத்தும் மூடி முடங்கி விடுவதால்.. மொட்டை மாடியிலும் வீட்டின் இரண்டடி நடைபாதையில் விளையாடிக்கொண்டிருந்த அஸாருதீன்களும் , ஆலன் பார்டர்களும் வீதிக்கு வந்து விடுவோம்  .. அந்த வீதியில் வந்து முழு சுதந்திரத்துடன் விளையாடுவது ஏதோ வான்கடே மைதானத்தில் விளையாடுவது போல ஒரு சாதனை உணர்வு கொடுக்கும்....வழக்கம் போல ஏதோ ஒரு வீட்டின் சன்னல் கண்ணாடியோ, ஓடோ உடைந்ததும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படும், இது போக இன்னும் சில சோக முடிவுகளும் உண்டு.. கருப்பாய் ஒருபுறம் ஓடுகிறதா இல்லையா என்ற சந்தேகம் வரவைக்கும் சாக்கடையில் விழுந்து இடது கையின் இரண்டு விரல்களால் மட்டும் பலமுறை மீட்டெடுக்கப்பட்ட ( எந்த விராட் கோலி அடித்தாரோ அவரே தான் சாக்கடையில் இருந்து எடுக்கவேண்டும்..ரூல்ஸ் ) அந்த தேய்ந்து போன 50 பைசா பந்து எங்காவது எடுக்க முடியாத இடத்தில் சென்று விழுந்து, மாற்று பந்தும் அடுத்த 50 பைசாவும் இல்லாமல் ஆட்டம் டிராவில் முடித்து வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு..


இது போல எந்த போக்குவரத்தும், தொந்தரவுகளும் இல்லாத வான்கடே மைதான தெரு இது ஆயுத பூஜை முடிந்த நாளிலோ அல்லது ஏதேனும் ஒரு பாரத் பந்த் நாட்களிலோ தான் கிடைக்கும்... எனவே ஆயுதபூஜை விஜய தசமி க்கு மனதில் தனி இடம்..


இது போக ரகசியமாக இன்னொரு கூத்தும் பண்ணுவேன். எந்த பாடத்தில் வீட்டுப்பாடம் எழுத சொன்னார்களோ, அந்த புத்தகம் நோட்டை கொண்டு வந்து பூஜைக்கு வைத்து தெளிவாக சந்தன குங்குமம் வைத்துப்பார்ப்பது...


பின்னர் வீட்டுப்பாடம் செய்யாமல் போய் ..சார் மறுபூஜை இன்னிக்கு தான் பண்ணினாங்க அதான் வீட்டுப்பாடம் செய்ய முடியல என்று புளுகி...அதெல்லாம் இருக்கட்டும் நீ கைய நீட்டு என்று வாத்தியார் வெளுத்த சம்பவங்களும் நடந்தது.. ஆனால் இந்த கோல்மால் வேலைகளெல்லாம் எப்படி 10-12 வயதுக்குள்ளேயே என் பிஞ்சு மனதில் தோன்றியது என்று இப்போது வியந்து பார்க்கிறேன்..


 ஆனால் இந்த புராணத்தின் கருத்து (moral of the story )என்னவென்றால் , என் வயதில் நான் பார்த்த என் வயதொத்த சகோதரர்களும், நண்பர்களும் வாழ்வின் விழுமியங்களோடு (வேல்யூஸ் னு தமிழ் ல சொல்வாங்க) வளர்ந்தோம் என்று தோன்றுகிறது, அது அருகே இருக்கும் ஒரு வயதானவருக்கு உதவுவதில் இருந்து, பெரிய அளவில் பொய் பித்தலாட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது வரை ஒரு தனி மற்றும் சமூக ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் அவை.. பின்னர் அவற்றை எங்கே தொலைத்தார்கள் என்று தெரியவில்லை..பின்னர் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டினோமோ அந்த அஸ்திவாரங்களில் நமது விழுமியங்களைப்புதைத்து விட்டோமோ ...